என்னென்று சொல்வது? - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 24, 2016

என்னென்று சொல்வது?

என்னென்று சொல்வது . ஆம் இந்த தலைப்பில் தான் நண்பனுக்கு ஒரு கட்டுரை போட்டி . அதிலும் இந்த ரூம்மேட் இமிசைகள் இருக்கே? அய்யோடா! குடும்ப சூழலில் வறுமையில் வாழ ஆண்கள் பழகுவதே இந்த ரூம் எடுத்து பயிலும் காலத்தில் தான் . பலவேளை பட்டினி கிடக்க நேரும். பணமிருந்தால் விருந்தே கொண்டாடி அன்றே செலவழிக்கபடும்.
பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் ,!! மனித மூளையாச்சே பணத்திற்கு ஏங்காமல் எப்படி பேர குடுத்துட்டு வந்துட்டான். ஆசை , காப்பாத்த நானிக்கும் தைரியம்.. அட அவனுக்கென்ன பயம் எனக்குத்தான பயம்.. எப்படியும் பரிசு வராது ஆயிரம் ரூபாய் தருபவர்கள் அவர்களுள் சிபாரிசு செய்யபடுபவருக்கே தரப்படும் என்பது ஐன்ஸ்டீனுக்கும் முந்தைய பௌதீக விதி...
அதை சொல்லிட்டேன் இருந்தாலும் ஒரு நப்பாசை அவனுக்கு , ஒருவேளை கிடைச்சா ஆயிரம் ரூபாய் ஆச்சே 1 வாரம் ரூம்க்கே பட்ஜெட் தேவையில்ல..  அந்த நிமிடம் அவன் எனக்கு தருமியாகவே தெரிந்தான் , அதுக்குனு நீ சிவாஜியானு கேக்காதீங்க அவன் நாகேஷ் இல்ல...
சரி இப்ப கட்டுரை எழுதிடலாம் ஆனா தலைப்புபடி பாத்தா என்ன எழுதுறதுனே புரியல? டேய் ஏதாவது எழுதி குடு அதிர்ஷ்டம் வந்தா வரட்டுமே!!... சரி பாப்போம்...
எனதருமை தமிழே ஒரு நல்ல கட்டுரைத் தா, நானும் ஓர் பிள்ளை தானே...
மனிதர்களின் முன்னோர்களான குரங்குகளுக்கு சில விநோத குணமுண்டு அதன் பிறவியிலேயே செய்யாததை மனிதன் செய்வதை கண்டு தானும் செய்யும்..
மழை வருதான்னு மனிதர்கள் நெற்றியின் மேல் கைவைத்து பார்ப்பார்களே அது மாதிரி குரங்கும் பார்க்குமாம்..
அதுபோல ,மரணம் விநோதமானது, தமிழில் இயற்கை மரணத்திற்கு மூன்று வழியுண்டு , மற்ற மொழிகளிலும் அவ்வளவுதான் .. வாதம்; பித்தம்; சைத்தியம்;
வாதம் என்பது பக்கவாதம் , முடக்குவாதம் போன்ற 12 வாதங்களில் ஒன்றால் மரணம் நேரலாம்..
பித்தம் இருவகை பித்தம் உண்டு  உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் பித்தம் , உஷ்ணம் குறைவதால் வரும் பித்தம், இரண்டில் ஏதோ ஒன்றில் மரணிக்கலாம்..
சைத்தியம் அதாவது சளி , இது பெரும்பாலும் அனைத்து இயற்கை மரணத்திற்கும் காரணமாகிறது...
அதில் ஐமேலுந்தி என்று ஒன்றை சொல்வார்கள் , அதாவது குரல் மெலிந்து காற்று மட்டுமே ஒலிப்பது.. உதாரணமாக பாடகர்கள் த்ரோட் இன்பெக்ஷன் என்கிறார்களே அதுபோல,, ஆனால் முழுதும் அதுவல்ல..
அதாவது நம் மார்புக்கூட்டை சிலந்தி வலை பின்னுவது போல சளி கோர்த்து தொண்டையை அடைக்கின்றதே அதுதான்.. மரணத்தின் போது மனிதன் பல்வேறு சிந்தனைகளில் உழன்று அதில் ஏதேனும் ஒன்றை சொல்ல நினைப்பானாம் அந்த நேரத்தில் அவன் குரலை சளி அமர்த்தி வெறும் காற்றை கடின குரலாக (கர் கர் என்று ) இழுத்துக்கொண்டிருப்பானாம்.
கிராமத்தில் அப்படி ஒரு நிலைக்கு ஒருவன் வந்த போதே அவன் இறந்ததாக செய்தி சொல்ல ஆள் அனுப்பிவிடுவர்..
அப்போது அவனது புலன்கள் அனைத்தும் அடங்கி முளையின் செயல்பாடு குன்றி , கிட்டதட்ட கோமா ஸ்டேஜ்னு வெச்சிக்கோங்களேன்... அந்த நேரத்திலும் ஒருவனுக்கு துணையாயிருப்பது ஈசன்தானாம்
இந்த விசயத்த திருஞான சம்பந்தர் , திருவையாற்று பதிகத்துல , ஐயாற்று பதிகம்னும் பெயருண்டு., அவர் கோயிலுக்கு வரும் வழி எப்படி இருந்ததுனு சொல்றாரு பாருங்க..
புலனைந்தும் பொறிகலங்க
நெறிமயங்கி அறிவழிந்திட்டு, ஐமேலுந்தி
அலமந்தபோதாக அஞ்சேலென
அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள்நடமாட

முழவதிர மழை என்று அஞ்சி
 சிலமந்தி
அலமந்து மரமறி
முகில்பார்க்கும் திருவையாறை!!!!



அர்த்தம் ;:  ஐந்துபுலன்களும் கலங்கிட நினைவினை மறந்து அறிவினை இழந்து , குரலிழந்து,ஞாபகங்கள் இல்லாமல் போன தருணத்திலும், அஞ்சாதே என்று அருள் செய்பவன் அமர்ந்துள்ள கோயிலில், வலம்வந்த அதாவது ஊர்வலம் வந்த நாட்டிய மகளிர் நடனம் ஆட , முழவு - மேளம்,மத்தளம் போன்ற அடிக்கும் கருவிகளை முழவு என்பர். அதிரும்படி முழங்க, சில மந்தி-குரங்கு  அஞ்சி நடுங்கி , இடிஇடிப்பதாக எண்ணி மரத்தினில் ஏறி வானத்தை மழை வருகிறதா என்று பார்க்கின்ற திருவையாறை என்கிறார்...
யோசித்து பாருங்கள் அவரது ரசனையையும் கற்பனையையும், மேளம் வாசிப்பதை இடி இடிப்பாதாக அஞ்சி குரங்குகள் மரமேறி மழை வருகிறதா என்று பார்க்கின்றன என்று சொன்னதை, அத்துடன் மரணத்தின் இறுதி தருணத்தை , கோமா ஸ்டேஜ் என்பதை அவர் சொன்ன விதத்தை
என்னென்று சொல்வது!!!?
முதற்பரிசை எதிர்பார்க்கவில்லை நான் , என் திருப்தி எல்லாம் இப்படி ஒன்றை படித்திருக்கிறேன் என்பதுதான்... என்றாலும் தேடி வந்தது முதற் பரிசு அந்த ஆயிரம் ரூபாய் தருமியிடம் சென்றது. என்ன ஆனது என்றுதான்  தெரியவில்லை..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages