சிவம், - வெண்பா, - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 9, 2018

சிவம், - வெண்பா,

தாயென் றமர்ந்து தயைபுரியுந் தந்தைநின்
சேயென் றுலகிற்ச் சிறப்புறச்செய் எந்தைநீ
நாயென் றமர்ந்து நடமிடும் கோலமொடு
நாயென் றிறைந்தம்ப லம்

ஒருகாலை ஊன்றி உடலதைத் தாங்கி
ஒருகால் உயர்த்தி உலகதை ஏந்தி
ஒருகையில் சோதியும் மானொரு கையும்
ஒருவனாய் ஆடுமீச னே.

உருவாய் உறைந்தே உணர்வாய் உறையும்
திருவாய் மொழியும் தமிழின் தலையே
அருவாய் அலதாய் அமைந்தே அடியார்
குருவாய் மகிமையருள் வாய்.

ஔியாய் ஒலியாய் ஔியிற் துகளாய்
வெளியாய் வளியாய் வளியில் உயிராய்
கிளியென் றெனையே வளர்த்தாய் இறையே
விளிக்கும் பெருஞான மே.

மரமாய் முளைத்தெனில் மானுடம் செய்கும்
உரமாய் உறைந்தெம்முள் அன்பினை செய்தும்
வரமாய் புவியும் படைத்தோன் உனையும்
சிரமதில் கொண்டேத்தும் அன்பு.

நெறியில் அறிவாய் அறிவில் அறமாய்
தறிபோல் எமையும் தையலிடும் நின்னை
மரிப்பெனும் நோவில் மறவாதார் தானும்
மரிப்பினை உய்கிலார் போல்.

நடமதில் நாளினை தந்தாய் அதன்பின்
நடமதிலே கோளினை செய்வித்து கோளுள்
நடமிட்டே மானுடம் செய்தபின் உள்ளே
நடமிடும் ராசனேயா னும்.

நினதடி போற்றி நினதருள் பெற்ற
நினதடி யார்தம் நினைவதில் நின்ற
நினதரும் ஞானம் நிறைந்திட செய்த
நினதற் புதமதை பாடி.

பொழுததை போக்கிடும் பொன்னடி யார்தாம்
விழுததைப் போல விரவியே நிற்கும்
குழுவதில் என்னையோர்  எண்ணெனக் கொள்ள
நழுவாது நல்வழி செய்.

இறைவாவுன் தாளதை போற்றியென் சிந்தை
நிறையவே தாமிறங்கி நல்லருள் தன்னை
குறையேது மில்லாது தந்தரு ளும்நின்
நிறைகழல் தன்னைசேர்ந் தேன்...




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages